இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 16, 2007

ஸ்டெப்ஸ் - ஷரீஃபா அவர்களுக்கு

தாங்கள் பெண்களுக்கான 'தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாஅத்' என்ற பெயரில் நெல்லையில் நடத்திய உண்ணாவிரதம் பற்றிய தகவல்கள் அறிந்தோம். அப்போழுது தாங்கள் பேசிய பேச்சுக்களும், பேசியவிதமும் தங்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. இஸ்லாமியப் பெண்ணிற்கு இஸ்லாமும், குர்ஆனும் பல்வேறு உரிமைகளையும், கடமைகளையும் வகுத்துத் தந்துள்ளது. அதே நேரம் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இவ்வாறு ஏக இறைவன் அல்லாஹுத்தஆலாவால் ஏற்படுத்தித் தந்துள்ள சில பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும்பொழுது தான் ஒரு பெண் எல்லாநிலையிலும், எல்லோராலும் மதிக்கக்கூடிய, போற்றக் கூடியவளாக இருப்பாள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதைவிடுத்து, பன்நெடுங்காலமாகவே முஸ்லிம் விரோத பாசிஸ சக்திகளிடம் விலை போனவர்கள் பல்வேறுபட்ட கொள்கைக் குழப்பங்களை உண்டாக்கி நமது சமுதாயத்தை பாகுபடுத்தி, கூறுபடுத்தி, வேறுபடுத்தி வைத்திருக்கின்றனர். இன்னும் வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற பாசிஸ சக்திகளுக்கு மத்தியில், நமக்குள் உட்கார்ந்து பேசிதீர்த்துக்கொள்ளக் கூடிய விஷயங்களைக்கூட மேடைபோட்டு, மைக் வைத்து கூப்பாடு போட வேண்டுமா..? அதை அந்நிய ஆடவர்களும், கேமராக்களும் சுற்றி வந்து படம் பிடிக்கத்தான் வேண்டுமா..? அதை பிரசுரிக்கின்ற பத்திரிக்கைகளும், அதை பார்க்கின்ற, படிக்கின்ற முகம் தெரியாத ஆண்களும் என்னென்ன கற்பனைகள் செய்வார்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா..?
நீங்கள் உங்களை அவமதித்து அடிமைபடுத்திய ஜமாஅத் என்று எந்த ஜமாஅத்தைக்கூறுகிறீர்கள். மஹரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருப்பது என்னவென்று தெரியுமா..? இன்றும் கூட இஸ்லாமி விரோத மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய ஆண், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களை எதிர்க்க ரோட்டுக்கு வரும் பெண்கள் கூட ஹிஜாப் என்ற கவசத்துடனே பிரவேசிக்கிறார்கள். ஆனால், நீங்களோ புடவையை இழுத்துச் சொருகிக் கொண்டு குழாயடிச் சண்டைக்கு வருவது போல் மைக் முன்பு நிற்கிறீர்கள். உலகத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அவர்களோடு உங்களையும் ஒப்பிட்டு பாருங்கள்.
ஏறத்தாழ எல்ல மஹல்லாக்களிலும் பெண்களுக்கான பயிற்சிகள், இல்லற ஒழுக்கம், பெண்கள் பயான், போட்டிகள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் எல்லா ஜமாஅத்துகள் மூலமாகவும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. பள்ளியோடும், மஹல்லா ஜமாஅத்தோடும், மார்க்கத்தோடும் சிறிதேனும் நெருங்கி வாழ்பவர்களுக்கு இதுவெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலான ஊர்களிலெல்லாம் பெண்கள் ஜமாஅத் என்று 3 நாட்களுக்கு பக்கத்து ஊர்களுக்கு செல்வார்கள், வருவார்கள். பெண்களுக்கு உண்டான எந்த பிரச்சனைகளையும் கேட்டு தங்களது கணவன்மார்களிடம் சொல்லி பிரச்சனைக்குள்ளான பெண்களின் கணவன்மார்களிடம் பேசச்சொல்லி எவ்வளவோ பிரச்சனைகளைத் தீர்த்திருக்கிறார்கள். ஷெரிஃபா அவர்களே நீங்களும், உங்களுடன் உள்ளவர்களும் ஒரு 3 அல்லது 40 நாள் பெண்களுக்கான தப்லீக் ஜமாஅத்தில் சென்று வாருங்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், 'மார்க்க செயல்பாட்டில் குறைபாடு கொண்டவர்களாகவும், அறிவில் குறைபாடு கொண்டவர்களாகவும் இருந்து உறுதியான மனிதனொருவனின் அறிவையும் போக்கக் கூடிய உங்களைப் போன்ற ஒருவரை நான் காணவில்லை' என்று, அப்போது பெண்கள், 'அல்லாஹ்வின் தூதரே..! அறிவுக் குறைபாடு மார்;கக செயல்பாட்டில் குறைவு என்பதன் மூலம் எதனை நீங்கள் கருதுகின்றீர்கள்' எனக் கேட்டனர். அதற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'பெண்ணின் சாட்சியம் ஆணின் சாட்சியத்தில் பாதியல்லவா' என வினவ 'ஆம்' என பெண்கள் பதில் கூறினர். 'அதுவே அவர்களது குறைவைக் காட்டுகின்றது' என்றார் இறைத்தூதர் (ஸல்). 'மாதவிடாய்க் காலத்தில் அவள் நோன்பு பிடிக்கவோ, தொழவோ மாட்டாள் அல்லவா..,' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வினவ பெண்கள் 'ஆம்' என்றனர். 'இது அவளது மார்க்க செயல்பாட்டில் உள்ள குறைவைக் காட்டுகின்றது' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். இது ஸஹீஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.
அதே நேரத்தில் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெண்களை பரிகசிப்பதும் பிழையான செயலாகும். ஏனெனில் இறைத்தூதர் இப்படியும் சொல்லியிருக்கிறார்கள். ''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே. நான் என் மனைவியரிடத்தில் சிறந்தவனாக உள்ளேன்.'' (இப்னுமாஜா) என்றும் இருப்பதனால், பெண்களது பிரச்சனைகளை ரோட்டுக்குக் கொண்டு சொல்ல அனுமதியளித்த இவர்களின் கணவன்மார்கள் சிந்திக்க வேண்டும்.
இன்னும் ஷெரிஃபா அவர்களே, உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களும், நீங்கள் தேடிய ஆதாரங்களினாலும் தங்கள் செய்வது தான் சரியான வழி என நினைத்தால் உங்கள் ஊர்களில் உள்ள பெரும்பான்மை பெற்ற, ஆண்கள் நிர்வாகிக்கும் இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள். ஏனென்றால், அவ்வியக்கங்கள் நடத்தும் சமுதாய முன்னேற்றத்திற்கும், உரிமைக் குமான ஆர்பாட்டங்கள், போரட்டங்கள், மறியல்கள், தர்ணாக்கள் போன்ற எல்லாவற்றிலும் கணவன்மார்களின் முழுச் சம்மதத்தோடு அவர்களின் பெண்களும் கலந்து கொள்வதனால் அவர்களுக்குரிய முழுப்பாதுகாப்பையும், பொருப்யையும் கணவன்மார்களால் கொடுக்க முடிகிறது. அதேபோல் உங்களுடைய, உங்களுடன் இருப்பவர்களுடைய கணவன்மார்களையும் உங்கள் ஊர்களில் உள்ள இயக்கங்களில் இணைத்துக்கொள்ளச்செய்து அதன் மூலம் உங்களது பிரச்சனைகளை வெளிக் கொணருங்கள். நன்மையை நாடி நீங்கள் நடத்திய பெண்களுக்கான உரிமைப்போராட்டங்கள் உங்கள் தலைமையில் நடத்தப்பட்டு அதன்மூலம் நீங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருந்தால் அதற்குண்டான கூலி மறுமையில் இன்ஷாஅல்லாஹ் உண்டு. ஆனால், நீங்கள் சென்ற வழிமுறை மற்றும் இஸ்லாமிய சட்ட மீறல்களுடன் இருந்தால் இறைவனால் பலமாக தண்டிக்கப்படுவீர்கள். ஏனெனில் மிக அத்தியாவசியத் தேவை இருந்தாலன்றி ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுதல் கூடாதென அல்லாஹ் கூறுகின்றான், ''அவர்கள் (பெண்கள்) தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக் கட்டும், ஆரம்ப ஜாஹிலிய்ய நிலை போன்று தமது அழகுகளை வெளிக்காட்டித் திரிய வேண்டாம்'' எனறு இவ்வசனம் இரு கருத்துக்களைத் தருகின்றது :
முதலாவது, ஒரு முஸ்லிம் பெண், வீட்டில் இருக்கும் போது தான் மன அமைதியையும் பூரண திருப்தியையும் பெறுகிறாள். ஏனெனில் அப்போது தான் அவள் அல்லாஹ் பெண்ணில் படைத்து விட்;ட இயற்கை உணர்வோடு ஒத்துப் போகும் பணியில் ஈடுபடுகின்றாள். அப்போது தனது பணியை மிகச் சரியாக நிறைவேற்றுகிறாள். பெண் வீட்டிலிருப்பதை ஒரு நிர்ப்பந்தமாக கருதி வீட்டை விட்டு வெளியேறுவதை விரும்புவார் களாயின் அது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதாக அமையும். மேலும் தனது வீட்டுக் கடமைகளிலும் தோல்வி அடைவாள்.
இரண்டாவது, ''ஆரம்ப ஜாஹிலிய்யத் நிலை போன்று அழகுகளை வெளிக்காட்டித் திரிய வேண்டாம்'' என்ற வசனத்தின் அடுத்த பகுதி சொல்லுகிறது. ஒரு பெண் வீட்டில் தன் கணவனுக்கு மட்டும் அழகுகளைக் காட்டுவது ஜாஹிலிய்ய பண்பா? அல்லது சிறந்த முறையா? உண்மையில் வீட்டுக்கு வெளியே செல்லும் போது அழகுகள் வெளித் தெரிய நடந்து கொள்ளுவது தான் ஹராமாகும். இந்த வகையில் ஒரு முஸ்லிம் பெண் அடிப்படையில் வீட்டில் இருந்து தன் பணிகளை நிறைவேற்ற வேண்டும். ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டால் ஆரம்ப ஜாஹிலிய்யத் நிலை போன்று அழகுகளை வெளிக்காட்டி நடந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து குறிப்பிட்ட இறை வசனத்திலிருந்து பெறப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறும் போது அழகுகளை வெளிக்காட்டக் கூடாது என்று இறைவசனம் கூறுவதனூடாக, அனுமதிக்கப்பட்ட காரணத்திற்காக உரிய முறையில் வீட்டை விட்டு வெளியேற முடியும் என்ற கருத்தையும் பெற முடிகின்றது. அந்த வகையில் ஷரீஅத்தில் வாஜிபான ஒரு காரியத்தை நிறைவேற்ற ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறல் வாஜிபாகும். முபாஹான காரியத்தை நிறைவேற்ற வெளியேறல் முபாஹ் ஆகும். மக்ரூஹ் அல்லது ஹராமான காரியத்தில் ஈடுபட வெளியேறினால் அது மக்ரூஹாக அல்லது ஹராமாக அமையும். எனவே இஸ்லாமியப் பணிக்காக வீட்டை விட்டு வெளியே றுவதும் அப்பணியின் சட்ட நிலைகளைப் பொறுத்து வாஜிபாகவோ, சுன்னத்தாகவோ அமையலாம்.
''அல்குர்ஆன் பெண்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கிவிட்டது எனவும், ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்கள் எந்தவித உரிமையும் இல்லாமல் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அப்படி பெண்களை அடிமைப்படுத்துவதற்கு மார்க்கத்தையும், குர்ஆனையும் ஆண்கள் முகமூடிகளாகப் பயன்படுத் திக்கொள்கின்றனர். குர்ஆனில் பெண்களுக்குக் கல்வி, திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இவை அனைத்தும் மறுக்கப்பட்டிருக்கின்றன...,'' இவையெல்லாம் நீங்கள் பேசியவைதான்.
குர்ஆன் கூறுகிறது, எங்களது உரிமைகளை கொடுங்கள் என்று கூப்பாடு போடும் நீங்கள், அதைப் பெற்றுக்கொள்ள அழகான வழிமுறைகளை கையாண்டீர்களா என்றால் இல்லை. ஏனெனில், இஸ்லாமிய சிந்தனையில் கவனம் செலுத்து வதற்காக உங்கள் வீட்டில் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும்; நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட அந்த நேரத்தில் கணவன், பிள்ளைகள் அனைவரும் உட்கார்ந்து குர்ஆனை ஓதி, விளங்கி ஷரீஅத்தின் சட்டதிட்டங் களையும், உரிமைகளையும் உங்கள் வீட்டில் பெற்று கொண்டிருப்பதன் மூலமாகத்தானே மற்றவர்களின், சமூகத்தின் பிரச்சனைகளைக் களைய முடியும். அவ்வாறு செய்திருக் கிறீர்களா..? தன் வீட்டில் ஓர் அழகிய இஸ்லாமிய சூழலைப் பெற்றுள்ள பெண் தான் ஏனைய பெண்களுக்கு மிகவும் தேவையாக உள்ளாள். எனவே இத்தகைய பெண், பெண்கள் பகுதியில் உழைப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிச் செல்வது ஏனைய பெண்களை விட ஒருபடி கூடுதலாக கடமையாகிறது.
நீங்களும், உங்கள் பின்னால் உள்ள ஒவ்வொருவரும் கீழ்வரும் கேள்விகளை மனந்திறந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்வதோடு அதற்கான தெளிவான பதில்களையும் தேடிக் கொள்ள வேண்டும்.
  • நான் இஸ்லாத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதில் உண்மையான நாட்டமும் எண்ணமும் கொண்டுள்ளேனா?
  • எனது நேரம் எனது தேவை இவை அனைத்திலும் இஸ்லாத்திற்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேனா?
  • இஸ்லாமியப் பணிக்காக உலக இன்பங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்க நான் தயாராக உள்ளேனா?
  • இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவது, இஸ்லாமிய நாகரீகத்தை உருவாக்குவது ஆண் இன்றி பெண்ணினால் மாத்திரம் சாத்தியமாகுமா?
  • எமது கணவரும் ஆண்மக்களும் கலந்து கொள்ளாமல் ஆண்களிடையே, பெண்களுக்கான இஸ்லாமிய எழுச்சி பெற முடியுமா?
  • எமது உரிமைகள் சிலவற்றை நாம் விட்டுக் கொடுக்காமல் அல்லது வீட்டு வேலைகள் சிலவற்றில் நாம் பங்கு கொள்ளாமல், போராட்டத்தில் கலந்து கொள்ளுதல் சாத்திய மாகுமா?
  • நாம் எமது சுயநலப் போக்கால் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேவைகளுக்கு, அவர்களின் மனைவியர்கள் எவ்வாறு உதவினார்களோ அவ்வாறு நாமும் நமது கணவன்மார்களுக்கு உதவுகின்றோமா..?

இது போன்ற கேள்விகளுக்கு உண்மையான விடை தேடிக்கொண்டு பிறகு உங்களது உரிமைகளையும், தேவைகளையும் தேடுங்கள்.
மேற்சொன்ன கருத்துகளையெல்லாம் சிந்தித்து, ஆராய்ந்து மார்க்க அறிஞர்களிடமும், இயக்கத் தலைவர்களிடமும் கலந்தாலோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். ''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது'' என்று பிரகடனம் செய்தவர்களே தங்கள் ஜமாஅத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவதை வன்மையாக கண்டித்து வருகின்ற இவ்வேளையில் நீங்கள் தனித்து ஆண்கள் துணையின்றி மார்க்கத்திற்கு முரணான (ஹிஜாப் இன்றியும், மஹரத்தை பேணாத) வகையில் போராடுவது எவ்வகையில் நியாயம் என்று கூறுங்கள். (உங்கள் உடம்பு இளைக்க ஊர் பெண்களையும் ஏன் பட்டினி போடுகிறீர்கள்.)

1 comment:

Anonymous said...

சகோதரர்ரே! ஸ்டெப்ஸ் சரிஃபா என்னசொன்னார் என்பதை முதலில் முழுதும் தரவும். தலையும் புரியவில்லை- வாலும் புரியவில்லை.