இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

September 27, 2007

திருச்சியில் 3 முஸ்லிம்கள் காவிரி ஆற்றில் மூழ்கி பலி

திருச்சி மரக்கடை வீதியில் உள்ள நத்ஹர்வலி தர்க்கா உள்ளது. இங்கு சந்தனக்கூடு விழா கடந்த 13-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி காவிரியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து மகான் ஹச்ரத் சப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்க்காவை சுத்தம் செய்வது வழக்கம்.
இதற்காக நத்ஹர்வலி தர்க்காவில் இருந்து 500 பேர் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு செல்வார்கள் பிறகு காவிரி ஆற்றில் இருந்து குடங்களில் தீர்த்த தண்ணீரை எடுத்து தர்காவுக்கு வருவார்கள். நேற்றும் 500 பேர் காவிரி ஆற்றுக்கு குடங்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் 10 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்களும் அடக்கம். இன்று அதிகாலை 1.30 மணிக்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில், அண்ணா சிலை எதிரே உள்ள அய்யாளம்மன் படித்துறையில், குவிந்த 500 பேரும் காவிரி ஆற்றில் இறங்கி தண்ணீரை குடத்தில் நிரப்பினர். அப்போது, இருட்டு நேரமானதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திடீரென்று கூட்ட நெரிசலில் சிலர் காவிரி ஆற்றுக்குள் விழுந்தனர். கும்மியிருட்டில் எத்தனைபேர் விழுந்தார்கள் என்று தெரிய வில்லை.
காவிரி ஆற்றுக்குள், விழுந்தவர்களை காப்பாற்றும் நோக்கில் சிலர் ஆற்றுக்குள் குதித்து முடிந்தவரை சிலரை காப்பாற்றி கரையில் சேர்த்தனர். சிலரின் கதி மட்டும் என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. அந்த இடத்தில் ஒரே அபாய குரலாக இருந்தது. காவிரி ஆற்றில் விழுந்தவர்களை தேடும் பணியில் நத்தர்ஷா பள்ளி வாசலை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடும் பணிக்கு பிறகு மாலிக் (வயது 20), என்ற வாலிபரின் உடலை மீட்டனர். இவரது தந்தை ஜாபர்முனபா. முனாபா வெளிநாட்டில் உள்ளார். ஒரே மகன் ஆன மாலிக் தீர்த்தக்குடம் எடுக்க நேர்த்திக்கடன் செய்திருந்தாராம். காவிரி ஆற்றுக்கு சென்ற இடத்தில் பலியாகிவிட்டார். சற்று நேரத்தில் மற்றொருவர் உடலும் மீட்கப்பட்டது.
30 வயது மதிக்கத்தக்க அவர், பெங்களூரைச் சேர்ந்த வர் சந்தனக்கூடு விழாவுக்காக பெங்களூரில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் காவிரி ஆற்றில் விழுந்து பலியாகிவிட்டார். இவரது உடல், தர்க்காவில் வைக்கப்பட்டு உள்ளது. உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் நத்தர்ஷா பள்ளி வாசல் அருகில் உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்த ஷாநிவாஷ் (25) என்ற ஷானு என்பவரும் காவிரி ஆற்றில் மூழ்கிவிட்டார். அவரது உடலை இன்று காலை 11 மணி வரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாலிபர்கள் தேடியும் கிடைக்கவில்லை. உடலை தேடி வருகிறார் கள். ஷாநிவாஸ்க்கு திருமண மாகி 5 மாதத்தில் குழந்தை உள்ளது.

சந்தனக்கூடு விழாவுக்கு தீர்த்தக்குடம் எடுக்க சென்று3 பக்தர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவிரி கரையில் சோகமாக கூட்டம் திரண்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் 8 பேர் வரை நீரில் மூழ்கி இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் 3 பேர் மட்டுமே இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் 5 பேர் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
நன்றி - மாலைமலர்

No comments: