இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

June 30, 2008

பிளஸ் 2 படித்தவர்களுக்கும் இனி வேலை :

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிரம்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கும் இனிமேல் யோகம் அடிக்கப் போகிறது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் நிறுவனங்கள், பயிற்சி அளித்து, வேலை வழங்க திட்டமிட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்பது தான், இன்றைய இளைஞர்களின் கனவு. கை நிறைய சம்பளம் கிடைப்பதால், வேலைக்கு சேர்ந்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஆடம்பரமான வீடு, அழகான கார் என, அனைத்து வசதிகளையும் அடைந்து விட முடிகிறது. ஆனால், அது தொடர்பான மேற்படிப்பு படித்தவர்களுக்கு மட்டுமே, கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் மற்றும் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை இருந்தது. ஆனால், சென்னையை மையமாக கொண்டு செயல்படும் லேசர் இன்போசிஸ்டம் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கும் தங்கள் நிறுவனத்தில் வேலை அளிக்க முன்வந்துள்ளது. படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்களில் திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுபற்றி, அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுரேஷ் காம்நாத் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் பணியில் சம்பத்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு, கற்கும் ஆர்வம் அதிகம் இருந்தது. இதையடுத்து, அலுவலக பணி முடிந்ததும் தினமும் சில மணி நேரம் அவருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தோம். மிக விரைவாக கற்றுக் கொண்டார். தற்போது, மற்ற ஊழியர்களுக்கு சவால் விடும் வகையில் வேலை செய்கிறார். இப்போது, அவர் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஆக பணிபுரிந்து வருகிறார். இதுபோல், வறுமை காரணமாக பள்ளி படிப்போடு படிப்பை நிறுத்தியவர்களில் திறமையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளித்து வேலை வழங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு சுரேஷ் காம்நாத் கூறினார்.
இதுபோல, மேலும் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வழங்க திட்டமிட்டுள்ளன. இதுபற்றி தகவல் தொழில்நுட்ப நிறுவன வட்டாரங்கள் கூறுகையில்,"இன்ஜினியரிங் முடித்துவிட்டு புதிதாக பணியில் சேருவோருக்கு கூட, முதல் மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஏராளமான சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. பிளஸ் 2 படித்தவர்களில் திறமையானவர்களை அடையாளம் கண்டு, சற்று கூடுதலான பயிற்சி அளிப்பது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு லாபகரமாக அமையும்' என கூறின.

No comments: