இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 18, 2010

குவைத் சிறையில் சிக்கி சீரழியும் தமிழர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க குவைத் தமுமுக வலியுறுத்தல்:

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் அங்கு போலி விசா மூலம் வந்தவர் என்று கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடும் தமிழர்களை காவலர்கள் சித்ரவதை செய்கின்றனர். இவர் களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குவைத் தமுமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து அரேபியர்களின் வீடுகளில் வேலை பார்ப்பதற்காக டிரைவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், சமையல்காரர் கள், வீட்டுபணிப் பெண் கள் என பல்வேறு வேலைகளுக்கு தமிழர்கள் குவைத், துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர்.


இவர்கள் அங்கு நிம்மதியாக வேலை பார்க்க முடிவதில்லை. பல லட்சம் கடன் வாங்கி வெளிநாட்டில் வேலைக்கு வரும் இவர்கள் இன்னும் சில வருடங்களில் கடனை அடைத்து வீடு வாங்கி, மகள் திருமணம், மகன் கல்வி என செட்டிலாகி விடலாம் என கனவுகளில் இருக்கும் போதே வேலையை விட்டு துரத்தப்படுகின்றனர்.


வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் ஏஜென்ட்களால் டூரிஸ்ட்விசாக்களில் அனுப்பப்படுவதால் சம்பந்தப் பட்டக் அரசுகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதவிர வேலைக்கு சேர்ந்த இடத்தில் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் வெளியே ஓடி வரும் தொழிலாளர்கள் மீது அவர்கள் போலீசில் புகார் கொடுக்கின்றனர். இதில் உடனே நடவடிக்கை எடுக்கும் போலீசார் அவர்களை சிறையில் அடைத்து விடுகின்றனர். இதுபோல் சம்பளம் போதா மல் ஒரு முதலாளியிடமிருந்து இன்னொரு முதலாளியிடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் சிறையிலடைக்கப்படுகின்றனர்.


பெரும்பாலான வழக்குகள் பொய் வழக்குகள் ஆகும். தமிழர்கள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிறையில் வாடி வருகின்றனர். இந்திய சிறைகளில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகளை குடும்பத்தினர் பார்த்து செல்லும் வாய்ப்பு இருப்பதால் அவர்கள் ஓரளவு மனஆறுதல் அடையும் வாய்ப்பு உள்ளது.


ஆனால் வெளிநாட்டில் அபாண்ட பழிசுமத்தி சிறையிலடைக்கப்படுபவர்கள் அனா தையாக, ஆதரவற்றவர்களாக, யாரும் உதவி செய்ய முடியாதவர்களாக திண்டாடி வருகின்றனர். தமுமுக, பிரன்ட்லைனர் உள்ளிட்ட அமைப்புகள் உதவி செய்தாலும் முழுமையாக உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.


தமிழகத்தில் அண்ணா பிறந்தநாள், காந்திஜெயந்தி ஆகிய நாட்களில் நன்னடத் தை காரணங்களுக்காக கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். குவைத் நாட்டில் பிப்.25,26 தேதிகளில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.


அதையொட்டி பல ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்வியின்மையால் பலர் போலி விசாக்களை ஏஜன்ட்கள் கொடுப்பதை அறியாமல் இங்கு வந்து அல்லல்படுகின்றனர்.


எனவே விசாவை பரிசோதனை செய்ய தனி அலுவலகத்தை தமிழகத் தின் முக்கிய நகரங்களில் அமைக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் அமைத்த அரசு அதனை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தள்ளாத வயதில் தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு கேரளாவில் இருப்பது போன்று தனிநல வாரியம் அமைக்க வேண்டும்.


தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் தான் அதிகமானோர் குவைத், துபாய் சிறைகளில் வருடக் கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக வின் குவைத் மண்டல நிர்வாகி பீர்மரைக்காயர் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.